இந்தியா

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 25% வீழ்ச்சி!

திருப்பூர், மார்ச் 17: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டில் 25 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.  நடப்பு நிதியாண்டில் (2011-12) பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.18 ஆயிரம் கோடியை எட்டியி

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர், மார்ச் 17: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டில் 25 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

 நடப்பு நிதியாண்டில் (2011-12) பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.18 ஆயிரம் கோடியை எட்டியிருக்க வேண்டும். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக நிலவும் பல்வேறு நெருக்கடிகளால் இதுவரை ரூ.12,500 கோடி அன்னியச் செலவாணி மட்டுமே ஈட்டியுள்ளது.

 அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் மட்டுமின்றி பிற நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகத்தை பெருக்க தீவிர முயற்சி நடப்பதுடன், இந்திய உற்பத்திக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இறக்குமதி வரி விலக்கு அளிப்பதற்கான சூழல் நிலவுவதால், வரும் நிதியாண்டில் (2012-13) திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி அடையும், என திருப்பூர் வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் 80 சதம் பங்கு வகிக்கிறது. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு 60 சதவீதமும், அமெரிக்காவுக்கு 30 சதமும், பிற நாடுகளுக்கு 10 சதமும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பருத்தி நூலிழைகளின் மூலமாக உற்பத்தியாகும் பின்னலாடைகளின் ஏற்றுமதியின் மூலம் கடந்த 2005-06-ம் ஆண்டில் ரூ.8,500 கோடியும், 2006-07-ல் ரூ.11,000 கோடியும் அன்னியச் செலவாணியை பெற்றுத் தந்துள்ளது திருப்பூர்.

 தொடர்ந்து, 2007-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு வீழ்ச்சி, ஃபோரெக்ஸ் டெரிவேட்டிவ் ஒப்பந்த பிரச்னை, அமெரிக்க பொருளாதார நெருக்கடி, உயர்நீதிமன்ற உத்தரவால் சாய சலவை ஆலைகள் மூடல், கடுமையான நூல் விலையேற்றம் போன்ற பிரச்னைகளால் திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தின் வளர்ச்சி வேகம் 15 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது.

 திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க புள்ளி விவரங்கள்படி, 2007-08ம் ஆண்டில் ரூ.9,950 கோடியும், 2008-09ம் ஆண்டில் ரூ.11,250 கோடியும், 2009-10ல் ரூ.11,500 கோடியும் ரூ.2010-11ம் ரூ.12,500 கோடி அளவுக்கும் திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, நடப்பு நிதியாண்டிலும் (2011-12) ரூ.12,500 கோடி அளவிலேயே ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது.

 கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில் அதே அளவில் பின்னலாடை ஏற்றுமதி நடந்திருந்தாலும், அதை வர்த்தக வீழ்ச்சியாகவே கருத முடியும் என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல்.

 இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

 கடந்த 3 ஆண்டுகளில் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தவிர, வங்கி வட்டி விகிதம், தொழிலாளர்கள் சம்பளம், போக்குவரத்து, மின்கட்டணம், இதர செலவினம் என உற்பத்திச் செலவு 18 சதம் வரை உயர்ந்துள்ளது. அதற்கேற்ப பின்னலாடைகளின் விலையும் உயர்த்தப்பட்டதன் காரணமாக நடப்பாண்டில் ரூ.12,500 கோடி ஏற்றுமதி வர்த்தகம் காட்டப்பட்டுள்ளது. அதன்படி, பின்னலாடை மதிப்பு உயர்ந்துள்ளதே தவிர வர்த்தகம் உயரவில்லை.

 கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் ஆண்டுக்கு 10 முதல் 15 சதவீதம் வரை வளர்ச்சி கண்டு வந்தது. அதே வளர்ச்சி வேகம் தொடர்ந்திருந்தால் 2011-12-ம் நிதியாண்டில் திருப்பூர் ஏற்றுமதி ரூ.18,000 கோடியை கடந்திருக்க வேண்டும். ஆனால், 2007-ம் ஆண்டுக்கு பிறகு பின்னலாடை தொழிலில் நிலவும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக வளர்ச்சி வேகம் குறைந்து, தற்போது ரூ.12,500 கோடி அளவிலேயே ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இதனால், சுமார் 80,000 தொழிலாளர்கள் திருப்பூரை விட்டு வெளியேறியுள்ளனர்.

 ஏற்றுமதி வர்த்தக வீழ்ச்சிக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளை மட்டுமே நம்பியிருந்ததும் முக்கியக் காரணம். தற்போது ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, தென்அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட பிற நாடுகளிலும் வர்த்தகத்தை பெருக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தவிர, பருத்தி நூலிழைகள் மட்டுமின்றி செயற்கை நூலிழைகள் மூலம் பின்னலாடைகள் உற்பத்திச் செய்வதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது, என்றார்.

 வரும் நிதியாண்டில் (2012-13) ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும் என்று திருப்பூர் வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்திய உற்பத்திக்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

 அதற்கான உத்தரவு வரும் ஜூன் மாதம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்டுகிறது. அவ்வாறு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இறக்குமதி வரி விலக்கு கிடைக்கும்பட்சத்தில் திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் பெருமளவில் அதிகரிக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT