முகப்பு
இந்தியா

பொருளாதாரப் பின்னடைவுக்கு மன்மோகன் சிங்தான் காரணம்: வெங்கய்ய நாயுடு

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:06 PM
பகிர்:

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கே காரணம் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

மும்பையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த நாயுடு கூறியதாவது:

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், 1991 ஆம் ஆண்டில் ஏற்பட்டது போன்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இதிலிருந்து விடுபடுவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக மன்மோகன் சிங்தான் பிரதமராக இருந்து வருகிறார்.

எனவே, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு அவர்தான் முழுப் பொறுப்பு. அவரின் தவறான பொருளாதாரக் கொள்கையே இப்போதைய நிதிநெருக்கடிக்குக் காரணம்.

2002 ஆம் ஆண்டு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், 2002-ல் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மன்மோகன் சிங்கும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் வேலைவாய்ப்பு பறிபோய்விடும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், வெளிநாட்டினரின் நிர்பந்தம் காரணமாகவே, நாட்டு மக்களுக்கு எதிரான அன்னிய முதலீட்டுக்கு மன்மோகன் சிங் அனுமதி அளித்துள்ளார். இதுபோன்ற சீர்திருத்தம் இந்தியாவுக்குத் தேவையில்லை.

இந்த முடிவால் வேலைவாய்ப்பு உருவாவதற்கு பதில் வேலைவாய்ப்பு பறிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

இது விஷயத்தில் கூட்டணிக் கட்சிகளைக் கூட ஆலோசிக்காமல் முடிவு எடுத்ததன் மூலம் கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் கட்சி மீறி உள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, நாடு முழுவதும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் நவம்பர் 11 ஆம் தேதி வரை பாஜக சார்பில் பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். மாவட்ட அளவில் உண்ணா விரதப் போராட்டமும் நடத்தப்படும் என்றார் நாயுடு.

அரவிந்த் கேஜரிவால் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த நாயுடு, ""ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.