எஞ்சியுள்ள மூன்று நாள்களில் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள ஆறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளித்த எதிர்க்கட்சிகள், சரக்கு-சேவை வரி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவில்லை.
மாநிலங்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அதன் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஹமித் அன்சாரி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை முடங்கியுள்ளது குறித்து கவலை தெரிவித்தன. நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக கூடுதல் நேரம் கூட்டத்தை நடத்துவதற்கு கட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளன என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி கூறினார்.
அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைக்குமாறு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விடுத்த கோரிக்கை குறித்து முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெளிவான பதில் ஏதும் அளிக்கவில்லை என்றார் நக்வி.
எஸ்.சி.எஸ்.டி திருத்த மசோதா, ஆள் கடத்தல் தடுப்பு மசோதா, அணுசக்தி திருத்த மசோதா, வர்த்தக நீதிமன்றங்களை அமைப்பதற்கான மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பதாக எதிர்க்கட்சிகள் கூறின.
கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், கூட்டத்தில் புதியதாக ஏதும் விவாதிக்கப்படவில்லை. எஸ்.சி.எஸ்.டி திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தது என்றார். மேலும், சரக்கு-சேவை வரி மசோதா குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றார்.
எஞ்சியுள்ள மாநிலங்களவை கூட்டத்தின்போது நாட்டில் தற்போது நிலவும் முக்கிய பிரச்னைகளான விலைவாசி உயர்வு, வெள்ளம் மற்றும் விவசாய வறட்சி, சகிப்புதன்மை இல்லாமை, அருணாலச பிரதேசம் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.