அரசின் நடவடிக்கையால் சரிவு கண்ட வெங்காயம் ஏற்றுமதி
வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் அதன் ஏற்றுமதி சரிவடைந்தது.
வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருப்பதாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் அதன் ஏற்றுமதி ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான ஆறுமாத கால அளவில், 18 சதவீதம் சரிவடைந்து 4,85,930 டன்னாக குறைந்துள்ளது.
கடந்த 2014-15-ஆம் நிதி ஆண்டின் இதே காலத்தில், 5,89,900 டன்னாக இருந்தது என, தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவம் தவறிய மழையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு டன் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை, 425 டாலரிலிருந்து (ரூ.27,625), 700 டாலராக (ரூ.45,500) அதிகரித்தது.
இதன் காரணமாக ஏற்றுமதி குறைந்து உள்நாட்டில் வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில் மத்திய அரசு வியாழக்கிழமை வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை முற்றிலும் ரத்து செய்துள்ளது. மொத்தவிலை சந்தையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 10 ரூபாய்க்கும் கீழ் சென்றதால் மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டது.
வெங்காய உற்பத்தியில், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.