இந்திய அரசியலமைப்பு கொள்கைகளுக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது: சோனியா காந்தி
இந்திய அரசியலமைப்பு கொள்கைகளுக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.
இந்திய அரசியலமைப்பு கொள்கைகளுக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.
இன்று கூடிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது மக்களவையில் நடைபெற்ற 'இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அர்பணிப்பு' என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சோனியா இவ்வாறு கூறினார்.
இந்திய அரசியலைப்பு கொள்கைகளுக்கு தற்போது பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பு குறிவைத்து தாக்கப்படுகிறது என்றார்.
Advertisement
அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், அதன் உருவாக்கத்தில் பங்கு வகிக்காதவர்கள் இன்று அதன் மீது உறுதிமொழி ஏற்கிறார்கள், அதற்கு உரிமை கொண்டாடுகிறார்கள். மேலும், அவர்கள் எல்லாம், அரசியலமைப்பின் அர்பணிப்பு குறித்து தற்போது பேசுகிறார்கள். இதைவிட பெரிய நகைச்சுவை வேறு ஏதும் இல்லை என்றார் சோனியா.
அரசியலமைப்பு எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அதை செயல்படுத்துவோர் மோசமாக இருந்தால், மோசமான விளைவுகளே ஏற்படும் என அம்பேத்கர் கூறியதை நினைவுகூர்ந்த சோனியா, கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் பிரச்னைகளை கவனித்தால், அவை அனைத்தும் நமது கொள்கைகளுக்கு எதிராகவே உள்ளது என்றார்
அம்பேத்கர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய போது, அவரது திறமைகளை கண்டறிந்து அவரை பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சியே, என்ற சோனியா இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்ட நவம்பர் 26, 1949 ஆம் தேதி, அம்பேத்கரைவிட வேறு யாரும் வரைவுக்குழுவுக்கு தலைமையேற்க முடியாது என்று மறைந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் புகழ்ந்ததையும் எடுத்துக் கூறினார்.
இந்திய அரசியலமைப்பின் வரலாறு மிக பழமையானது. அது இந்திய சுதந்திர போராட்டத்துடனும், காங்கிரஸ் கட்சியுடனும் தொடர்புடையது. கராச்சியில் 1931-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே, அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார உரிமைகள் குறித்து நேரு தீர்மானம் கொண்டுவந்துவிட்டார் என்றார் சோனியா.
அப்போது குறுக்கிட்ட பாஜக உறுப்பினர்களிடம், இது வரலாறு. இதற்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது என்றார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை புழந்த சோனியா, அரசியலமைப்பை உருவாக்க மிகபெரும் தலைவர்கள் இணைந்து பணியாற்றினது மிக அரிதான நிகழ்வு என்றார்.
இந்திய அரசியலமைப்பு மிகவும் நெகிழ்வு தன்மையுடையது. பல்வேறு தருணங்களில் மேற்கொள்ளப்பட்ட 100க்கும் அதிகமான திருத்தங்களே அதற்கு சாட்சி என்றார் சோனியா.