மல்லையாவுக்கு மீண்டும் சம்மன்; ஏப். 9ல் ஆஜராக உத்தரவு
அமலாக்கத் துறை சார்பில் விஜய் மல்லையாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வருகிற 9 ஆம் தேதி அவர் மும்பையில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்
புது தில்லி: அமலாக்கத் துறை சார்பில் விஜய் மல்லையாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வருகிற 9 ஆம் தேதி அவர் மும்பையில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
விஜய் மல்லையா, ஐடிபிஐ வங்கியில் ரூ. 900 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாத வழக்குக் குறித்து மும்பை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மல்லையாவுக்கு ஏற்கெனவே இருமுறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
Advertisement
எனினும் நேரில் ஆஜராகுவதிலிருந்து, மே மாதம் வரை விலக்கு அளிக்குமாறு மல்லையா வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும் அவரது வேண்டுகோளை அமலாக்கத் துறை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், அமலாக்கத் துறை இன்று மூன்றாவது சம்மனை மல்லையாவுக்கு அனுப்பியுள்ளது. அதில், ஏப்ரல் 9 ஆம் தேதி மும்பையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பண மோசடி வழக்குகளில் மூன்று முறைக்கு மேல் சம்மன் அனுப்பப்படுவதில்லை. எனவே, மல்லையாவுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள சம்மன் கடைசியாக இருக்கும் எனத் தெரிகிறது.