புதுதில்லி: வரவிருக்கும் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு அதற்கு முன்பாக பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த மாதம் எட்டாம் தேதி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்பொழுது அவர் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற தகவலை வெளியிட்டார். அத்துடன் இந்த நடவடிக்கையானது அடுத்த 50 நாட்களில் பலனளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
அந்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் வரவிருக்கும் ஆங்கிலப்புத்தாண்டைமுன்னிட்டு அதற்கு முன்பாக பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் நாளை அல்லது சனிக்கிழமை என்று உரையாற்றுவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
ஆனால் அவர் தன்னுடைய உரையில் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு நாடு எவ்வாறு பயணிக்க உள்ளது என்பது பற்றிய செயல் திட்டம் குறித்து பேசுவார் என்றும், குறிப்பாக பணப்புழக்கத்தை அதிகரிப்பது குறித்து தகவல்களை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் நவம்பர் 8-ஆம் தேதி அறிவிப்புக்கு பிறகான பொருளாதார சூழலை மக்கள் எதிர் கொள்ள வேண்டியது பற்றியும்பேச வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை அன்று நிதி ஆயோக் குழு கூட்டத்தில் பொருளாதார நிபுணர்களை சந்தித்து உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.