தேச துரோக வழக்கில் தில்லி பல்கலை. மாணவர் தலைவர் கைது
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து கூட்டம் நடத்தியதாக தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து கூட்டம் நடத்தியதாக தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
இந்திய நாடாளுமன்றத்தை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார் அப்சல் குரு. இவருக்கு தூக்குத் தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்தது.
எனினும், தடையை மீறி சில மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ் கிரி மற்றும் ஏபிவிபி மாணவர் அமைப்பும் தில்லி வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
Advertisement
இதையடுத்து போலீஸார் அடையாளம் தெரியாதவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ (தேச துரோகம்), 120பி (குற்றவியல் சதி)ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பல்கலைக்கழகத்துக்கு சாதாரண உடையில் சென்ற இரு காவலர்கள், மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று, பின்னர் கைது செய்தனர்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு குழுவை அமைத்துள்ளது.
இதனிடையே மாணவர் கைது குறித்து டுவிட் செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
இந்தியாவில் வசித்து கொண்டே இந்தியாவுக்கு எதிராக கோஷமிடுவோரும், இந்திய இறையான்மை மற்றும் ஒற்றுமைக்கு எதிராக குரல் கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.