பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மியின் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தல்...
பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் 3 மாநிலங்களவை உறுப்பினர்களையும் அவர்களின் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டுமென, அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல் ஆகியோர் வெள்ளிக்கிழமை (ஏப். 24) மாலை அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தனர். இவர்களுடன் அக்கட்சியின் மேலும் 4 மாநிலங்களவை உறுப்பினர்களும் பாஜகவில் இணையவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் கூறியுள்ளார்.
Advertisement
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“பாஜகவில் இணைந்ததற்காக ராகவ் சத்தா, அசோக் மிட்டல் மற்றும் சஞ்சய் பதாக் ஆகியோரை மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவைத் தலைவரிடம் நான் கடிதம் ஒன்றை சமர்ப்பிக்கப்போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய அரசியலமைப்பின்படி ஒரு கட்சியின் மூன்றில் இருபங்கு எம்பிக்கள் மற்றொரு கட்சியில் இணைந்து தங்கள் பதவியில் தொடர முடியும் எனவும், ஆம் ஆத்மியின் 10 மாநிலங்களவை உறுப்பினர்களில் 7 பேர் பாஜகவில் இணையவுள்ளதாகவும் ராகவ் சத்தா கூறியது குறிப்பிடத்தக்கது.