உளவு நிறுவனங்களை நீதிமன்றம் மூலம் கண்காணிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
இந்திய உளவு நிறுவனங்களை நீதிமன்றம் மூலம் கண்காணிப்பது என்பது தேசியப் பாதுகாப்பில் குறைவை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்திய உளவு நிறுவனங்களை நீதிமன்றம் மூலம் கண்காணிப்பது என்பது தேசியப் பாதுகாப்பில் குறைவை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்திய உளவு நிறுவனங்ககளான ரா, ஐபி மற்றும் என்டிஆர்ஓ ஆகிய அமைப்புகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்படும் நிலையில், அவற்றை நீதிமன்ற கண்காணிப்புக்கு உள்படுத்தவும், அதன் செலவுகளை ஆய்வு செய்வதற்கும் உத்தரவிட வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று கடந்த 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இன்று அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவ கீர்த்தி சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்ததது. மனுதாரர் சார்பில் பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.
Advertisement
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள உளவு நிறுவனங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தின் கண்காணிப்பில் இயங்குகின்றன. இந்தியாவில் மட்டும் உலவு அமைப்புகள் நாடாளுமன்ற வரம்புக்குள் வருவதில்லை. மேலும், அவை அரசியல் ஆதாயங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என பூஷண் வாதிட்டார்.
இந்த மனுவை ஏற்க விரும்பவில்லை என கூறிய நீதிபதிகள், உளவு அமைப்புகளைக் கண்காணிப்புக்கு உள்படுத்துவது, தேசப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கக் கூடும் என்றனர்.
பிரிட்டனைப் போன்று இந்தியா இருக்க முடியாது. மத்திய அரசுக்கும், நாடாளுமன்றத்துக்கும் சில அளவுகோல்கள் இருக்க வேண்டும். அனைத்து விஷயங்களையும் நாடாளுமன்றத்தின் வரம்புக்குள் கொண்டு வர முடியாது என்றனர்.
உளவு அமைப்புகளை கண்காணிப்பதற்கு பிற வழிமுறைகள் எதுவும் இல்லை என்று கூறி விட முடியாது. சில விஷயங்களில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியது அவசியமாகும். இல்லையெனில், அந்த அமைப்புகளின் நோக்கங்கள் நிறைவேறாமல் போய்விடும்.
மேலும், தேசப் பாதுகாப்புக்கு ஊறு விளைக்கும் இதுபோன்ற மனுக்களை நீதிமன்றங்கள் ஏற்பது சரியல்ல என்று நாங்கள் கருதுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.