ஜாட் போராட்டம்: தீவைத்து எரிக்கப்பட்ட ரயில் எஞ்சின்
இடஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஒரு ரயில் எஞ்சின் தீவைத்து கொளுத்தப்பட்டது.
ஹரியானா மாநிலத்தில் தொடங்கிய ஜாட் இனத்தவர் போராட்டம் தற்போது ராஜஸ்தான் மாநிலத்துக்கும் விரிவடைந்துள்ளது.
இங்குள்ள பரத்புர் மாவட்டத்தில் உள்ள ஹேலாக் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் எஞ்சினை போராட்டகாரர்கள் தீவைத்து கொளுத்தினர். மேலும் பாப்ரேரா ரயில் நிலையத்துக்குள் நுழைந்த கலவரகாரர்கள், ரயில் நிலையத்தை அடித்து துவம்சம் செய்தனர். மேலும், டிக்கெட் கவுன்டரிலிருந்த ரூ. 5000 எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர் என பரத்புர் காவல் துறை ஐ.ஜி. அலோக் வஷிஷ்டா கூறினார்.
Advertisement
கலவரகாரர்களை அடக்குவதற்காக இரு இடங்களில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தேசிய நெடுஞ்சாலை 11ல் அமைநதுள்ள உச்சைன் பகுதியில் அதிக அளவில் திரண்டிருந்தவர்களை கலைப்பதற்காக போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், கண்ணீர் புகைக்குண்டும் வீசப்பட்டது.
ஹரியாணாவில் நடைபெறும் போராட்டத்துக்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜாட் இனத்தவர் ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் நடத்தினர்.மேலும் ரயில் போக்குவரத்தையும் தடுத்தனர். இதையடுத்து பரத்புர் மாவட்டத்தில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாநில சமூக நலத் துறை அமைச்சர் அருண் சத்ருவேதி, சுற்றுலாத் துறை அமைச்சர் கிருஷ்ணேந்திர கௌர் ஆகியோர் ஜாட் இனத் தலைவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.