புது தில்லி: தில்லியில் 2014ஆம் ஆண்டு சுற்றுலா வந்த டென்மார்க் நாட்டு பெண் பயணியை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 5 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் இறுதி வாதம் முன்வைக்கப்பட்டது.
முன்னதாக இது தொடர்பான வழக்கில், மகேந்திரா (எ) கஞ்சா (27), முகம்மது ராஜா(23), ராஜு(24),அர்ஜூன்(22),ராஜு சக்கா(23) ஆகியோரை குற்றவாளிகள் என்று செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 6-ஆம் தேதி அறிவித்தது.
இந்நிலையில், குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை மீதான வாதம் இன்று நடைபெற்றது.
அப்போது சிறப்பு அரசு வழக்குரைஞர் அதுல் ஸ்ரீவாஸ்தவா, "5 பேரும் செய்த குற்றம் கொடூரமானதும், மனிதாபிமானமற்றதுமாகும். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான சாகும் வரை சிறை தண்டனை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6-ஆவது நபர், விசாரணை நடைபெற்று வந்த காலக் கட்டத்தில் மரணமடைந்துவிட்டார். அதையடுத்து, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய 3 சிறுவர்கள் மீதான விசாரணை சிறார் நீதி ஆணையத்தில் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.