கொலை வழக்கு: டக்ளஸ் தேவானந்தாவிடம் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை
கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொலி காட்சி (விடியோ கான்ஃபரன்சிங்) மூலம் சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் சனிக்கிழமை விசாரணை நடத்தியது.
கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொலி காட்சி (விடியோ கான்ஃபரன்சிங்) மூலம் சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் சனிக்கிழமை விசாரணை நடத்தியது.
கடந்த 1986-ஆம் ஆண்டு சென்னையில் வசித்தபோது, திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொலை செய்ததாக, டக்ளஸ் தேவானந்தா உள்பட 10 பேர் மீது சூளைமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை மாவட்ட 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுப்படி தேவானந்தாவை காணொலிக் காட்சி மூலம் விசாரிக்க சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்ற பதிவாளர் எஸ்.பி. ரிஷிரோஷன், நீதிமன்ற அதிகாரி எஸ்.சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
Advertisement
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு தேசிய தகவல் மைய (என்.ஐ.சி.) உதவியுடன், சனிக்கிழமையன்று டக்ளஸ் தேவானந்தாவிடம் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக, மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்குள் பெரிய திரை வைக்கப்பட்டது.
காணொலி காட்சி மூலம் ஆஜர்: இந்த வழக்கு சென்னை மாவட்ட 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காலை 10.15 மணியளவில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்தபடியே அங்குள்ள விடியோ கேமரா மூலம் டக்ளஸ் தேவானந்தா ஆஜரானார்.
அதேபோல, வழக்கில் போலீஸ் தரப்பில் குருமூர்த்தி, பன்னீர்செல்வம், வீரமுத்து, மணி ஆகியோர் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, தேவானந்தா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் ஆர்.ராஜன், ஏ.டி.நாகேந்திரன் ஆகியோர் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், இந்த வழக்கில் போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கியால் சுட்டார் என்று கூறப்படவில்லை. அதனால் கொலை குற்றச்சாட்டு டக்ளஸ் தேவானந்தா மீது இல்லை. அவர் மீது ஆயுதம் வைத்திருந்ததாகத்தான் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு வழக்குரைஞர் எம்.பிரபாவதி மனு தாக்கல் செய்தார். விசாரணைக்குப் பிறகு, வழக்கை வரும் 15-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.