முகப்பு
இந்தியா

தீயா வேலை செய்ய மறந்த 'குமார்': மோடியின் கல்விச் சான்றிதழில் ஆம் ஆத்மி சந்தேகம்

பிரதமர் நரேந்திர மோடி தில்லி பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றதற்கான கல்விச் சான்றிதழ்களை பாஜக இன்று வெளியிட்ட நிலையில், எம்ஏ மற்றும் பிஏ படிப்பு சான்றிதழ்களில் மோடியின் பெயர் ஏன் வேறுப்பட்டுள்ளது என ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

Updated On : 9 மே, 2016 at 4:46 PM
பகிர்:

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி தில்லி பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றதற்கான கல்விச் சான்றிதழ்களை பாஜக இன்று வெளியிட்ட நிலையில், எம்ஏ மற்றும் பிஏ படிப்பு சான்றிதழ்களில் மோடியின் பெயர் ஏன் வேறுப்பட்டுள்ளது என ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி தகுதி குறித்து மத்திய தகவல் ஆணையத்துக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதினார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த விவரங்களை வெளியிடுமாறு தில்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்கள் வலியுறுத்தப்பட்டன.

குஜராத் பல்கலைக்கழகம் மோடியின் முதுநிலை கல்வித் தகுதி குறித்த சான்றிதழ்களை வெளியிட்ட நிலையில், தில்லி பல்கலைக்கழகம் பிரதமரின் இளநிலை கல்வி குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

Advertisement

இந்நிலையில் தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர், பிரதமர் தில்லி பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றதற்கான சான்றிதழ்களை வெளியிட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பிரதமருக்கு எதிராக பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பொய்யை உண்மையாக்க முயற்சிக்கிறார். பிரதமரின் கல்வித் தகுதி குறித்த விவகாரத்தில் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்றார்.

அருண் ஜேட்லி பேசுகையில், நாட்டில் பொது விவாதங்கள் மிகவும் தரம் தாழ்ந்து வருகின்றன. பிரதமர் மோடி மீது ஆம் ஆத்மி கட்சியினர் முன்வைத்தது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பிரதமரின் கல்வித் தகுதியை விளக்குவதற்காக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதற்கு வெட்கப்படுகிறேன். தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் போலிச் சான்றிதழ் வழக்கில் சிக்கியுள்ளதை மறந்து விட்டு பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றார்" என்றார்.

பாஜகவின் குற்றச்சாட்டை மறுத்த ஆம் ஆத்மி, பாஜக வெளியிட்டுள்ள பிரதமரின் கல்விச் சான்றிதழ்களில் இரு வேறு பெயர்கள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

பிஏ கல்விச் சான்றிதழில் நரேந்திர குமார் தமோதர்தாஸ் மோடி என்றும் எம்ஏ சான்றிதழில் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்றும் உள்ளது. மேலும், மோடியின் பெயர் ஆங்கிலத்தில் தவறாக எழுதப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

இதுதவிர பிஏ மதிப்பெண் சான்றிதழில் 1977 என்றும், கல்விச் சான்றிதழில் 1978 என்றும் உள்ளது. எனவே, அமித் ஷா வெளியிட்டது போலியான சான்றிதழ் என்றும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.