நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
திருநள்ளாறு கோயில் யானை பற்றி..
புதுச்சேரி திருநள்ளாறு கோயில் யானை பிரக்ருதி வெயிலின் தாக்கத்தைக் குறைக்கக் குளத்தில் குளித்து குதுகலமாக ஆட்டம் போட்டது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ சனிஸ்வர பகவான் கோயிலில் பிரக்ருதி எனும் பிரணாம்பிகை 22 வயது பெண் யானை உள்ளது. யானையை முருகேசன் மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பாகன்கள் பராமரித்து வருகின்றனர். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் திருவிழா மற்றும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பூஜைகளில் கோயில் யானை பிரக்ருதி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி வருகிறது.
தமிழகத்தில் யானைகளை நீர்பாய்ச்சும் ஷவர் செயற்கையாக அமைத்தும் சிறிய தொட்டி அமைத்தும் குளிக்கவைத்து வரும் நிலையில் திருநள்ளாறு பிரக்ருதி யானையை தினமும் காலை மற்றும் மாலை இருவேளைக் கோயிலில் அமைந்துள்ள மிகப்பெரிய சரஸ்வதி தீர்த்தக் குளத்தில் குளிக்க வைக்கப்பட்டு வருகிறது.
Advertisement
தற்போது காரைக்காலில் கோடை வெப்பம் காரணமாகச் சுட்டெரிக்கும் வெய்யில் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தைத் தணிப்பதற்காகத் தீர்த்தக் குளத்தில் கூடுதலாக மதிய வேலையிலும் பிரக்ருதி யானையை குளத்தில் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள பிரக்ருதி யானையை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக குளத்தை விட்டு வெளியேறாமல் குத்தாட்டம் போட்டது.
பாகன் மணிகண்டன் குளத்தில் மூழ்கிக் காணாமல் போவதும் பாகன் தேடிக் கண்டுபிடித்து வெகு நேரம் நீரில் மூழ்கி தம்கட்டி விளையாட்டு விளையாடி பாகனைக் கண்டுபிடித்த உற்சாகத்தில் யானை நீரைப் பாய்ச்சி விளையாடியது.
குளித்து முடித்ததும் குளத்தை விட்டு வெளியேற சொன்னால் குளத்தை விட்டு வெளியேறாமல் நீரைக் கண்ட குழந்தைபோல் செல்ல அடம்பிடித்தது பிரக்ருதி யானை. குளத்தில் யானை குளித்து குதுகலமாக இருப்பது அனைவரையும் கண் கவர வைத்துள்ளது.