பிரதமர் மோடியின் 'நண்பர்கள்' மீது நடவடிக்கை தேவை: ராகுல் காட்டம் !
பிரதமர் மோடியின் 'நண்பர்கள்' மற்றும் கருப்புப்பணத்தைக் குவித்து வைத்திருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை தேவை என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தானே: பிரதமர் மோடியின் 'நண்பர்கள்' மற்றும் கருப்புப்பணத்தைக் குவித்து வைத்திருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை தேவை என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலமே தானே அருகில் உள்ள இடம் பிவாண்டி. இங்கு இன்று காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது:
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி, குறிப்பிட்ட 15 தொழிலதிபர்களின் ரூபாய் 11,000 கோடி அளவிலான கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். தற்பொழுது இந்த தொழிலதிபர்களின் துணையுடன்தான் இந்த அரசு நடத்தப்படுகிறது.
தற்பொழுது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளார். இதன்மூலம் சாதாரண மக்களின் சட்டை பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை எடுத்து , குறிப்பிட்ட அந்த தொழிலதிபர்களுக்கு கொடுக்கும் பணி நடக்கிறது. அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அவர்கள் மீதும், கருப்பு பணத்தை குவித்து வைத்திருக்கும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த ரூபாய் நோட்டுக்கள் நடவடிக்கை மூலம் பெறப்படும் தொகையானது இன்னும் ஒரு வருடத்திற்குள் குறிப்பிட்ட அந்த 15 முதல் 20 தொழிலதிபர்களிடம் சென்று சேர்ந்து விடும்.
இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்தார்.