முகப்பு
இந்தியா

இந்திய முஸ்லிம்கள் மத்தியில் அமைதியின்மை: ஹமீது அன்சாரி

இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அமைதியின்மை நிலவுவதாக குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அமைதியின்மை நிலவுவதாக குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் சகிப்பின்மை சம்பவங்கள், பசுப் பாதுகாப்பு அமைப்பினரின் தாக்குதல்கள், சிறுபான்மையினர் தொடர்பான ஹிந்து அமைப்புத் தலைவர்களின் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், ஹமீது அன்சாரி இவ்வாறு கூறியுள்ளார்.
வியாழக்கிழமையுடன் ஓய்வு: குடியரசு துணைத் தலைவராக கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் (இருமுறை) பதவி வகித்துவிட்ட ஹமீது அன்சாரி வியாழக்கிழமையுடன் (ஆக.10) ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி வருமாறு:
இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமூக மக்கள் மத்தியில் அமைதியின்மை நிலவுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்கள், இந்த கருத்துகள் தெரிவித்து வருவதை கேட்டுள்ளேன். பெங்களூரில், வட இந்தியாவில் என்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதை நான் கேட்டுள்ளேன்.
இந்தியாவில் தாங்கள் வேண்டாதவர்களாகக் கருதப்படுகிறோம் என்ற எண்ணம், முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளதா என்று கேட்கிறீர்கள். அந்த விவகாரத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதேநேரத்தில், தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற எண்ணம் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்தியாவானது பன்முகத்தன்மை கொண்ட சமூகமாக கடந்த 70 ஆண்டுகளாக மட்டும் இல்லை. பல நூற்றாண்டுகளாகவே, இந்நிலையில்தான் இருக்கிறது. தற்போதைய சூழல், அனைவரோடும் ஒற்றுமையாக வாழும் தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
முத்தலாக் நடைமுறை என்பது சமூகத்தின் தவறான பழக்கமாகும். அது மத அடிப்படையிலான வழக்கம் கிடையாது. இந்த பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட சமூகத்தினர்தான் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும். காஷ்மீர் பிரச்னை என்பது அரசியல் ரீதியிலான பிரச்னையாகும். எனவே, அந்த பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண வேண்டும்.
சகிப்பின்மை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் எனது கருத்துகளை நேரில் தெரிவித்துள்ளேன். இதேபோல், மத்திய அமைச்சர்களிடமும் இதுகுறித்து நான் விவாதித்தேன். அப்போது சில விளக்கங்களும், காரணங்களும் தெரிவிக்கப்பட்டன என்றார் அன்சாரி.

முழு கட்டுரையைப் படிக்க →