முகப்பு
இந்தியா

மகாத்மா காந்தியின் பொன்மொழியை மேற்கோள்காட்டி பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்ட நிதீஷ்-லாலு

மகாத்மா காந்தியின் பொன்மொழியை மேற்கோள்காட்டி பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத்தும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

மகாத்மா காந்தியின் பொன்மொழியை மேற்கோள்காட்டி பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத்தும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர்.
புவி தினத்தைக் கொண்டாடும் வகையில், பிகார் மாநிலம், பாட்னாவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று நிதீஷ் குமார் பேசியதாவது:
'மனிதர்களின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஆற்றல் இந்த பூமிக்கு உண்டு. ஆனால், அவர்களுடைய பேராசையை மட்டும் பூர்த்தி செய்ய இயலாது' என்று மகாத்மா காந்தி தெரிவித்தார். வளர்ந்துவரும் சிலரின் பேராசைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது என்றார் நிதீஷ்.
இவர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு இந்தக் கருத்தை தெரிவிக்க இல்லையென்றாலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான லாலு பிரசாத்தை மறைமுகமாக அவர் சாடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆர்ஜேடி பிரமுகர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக எழுந்த புகார் குறித்தும், முதல்வராக லாலு பதவி வகித்த காலத்தில் பகல்பூர் மாவட்ட அரசுக் கருவூலத்திலிருந்து ரூ.250 கோடி சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்தும் நிதீஷ் பேசினார்.
எனினும், இதுதொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணை குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
லாலு பிரசாத் பதிலடி: இதனிடையே, நிதீஷ் குமார் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'பேராசை குறித்து மகாத்மா காந்தி சரியாகவே கூறியிருக்கிறார். அதாவது, ஊழலைக் காட்டிலும் அரசியல் பேராசை கொண்டிருப்பது அதிக ஆபத்தானது' என்று லாலு பிரசாத் தெரிவித்தார்.
நிதீஷுக்கு எதிராக தேஜஸ்வி ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், மகா கூட்டணியிலிருந்து
நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி விலகி பாஜகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார் முன்னாள் துணை முதல்வரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
மோதிஹரி நகரில் உள்ள மகாத்மா காந்தி மைதானத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் அமர்ந்து தேஜஸ்வி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அவருடன் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், பிகார் ஆர்ஜேடி தலைவர் ராமசந்திர பர்பே உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →