முகப்பு
இந்தியா

விசாரணை நீதிமன்றங்கள் வழங்கும் ஜாமீன்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அவருக்கு விசாரணை நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்குவதை தவிர்க்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அவருக்கு விசாரணை நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்குவதை தவிர்க்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், விசாரணை நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
ஒருவர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவருக்கு ஜாமீன் வழங்குவதை விசாரணை நீதிமன்றங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஒருவர் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தால் அல்லது முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தால், அவர் விசாரணை நீதிமன்றங்களில் சரணடையவும், அங்கு ஜாமீன் கோரவும் முடியாது. இந்த உத்தரவை நாட்டில் உள்ள அனைத்து விசாரணை, கீழமை நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்கள் என அனைத்துக்கும் தங்கள் முன் விசாரணைக்கு வரும் வழக்குகளில் முன்ஜாமீன் வழங்க உரிமை உண்டு. அதே நேரத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள ஒருவர், வேறு கீழமை நீதிமன்றத்தில் சரணடையும்போது அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஏனெனில், இதற்கு முன்பு இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கீழமை நீதிமன்றத்தில் சரணடைந்து, அங்கு ஜாமீன கோருவது என்பது சில சூழ்நிலைகளை, சட்டத்தை ஏமாற்றும் நடவடிக்கையாக மாறிவிடுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →