முகப்பு
இந்தியா

இந்தியாவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் 'அந்த' மாநிலங்கள்: சாட்டை எடுக்கச் சொல்லும் 'நிதி ஆயோக்' தலைவர்!

இந்தியாவின் வளர்ச்சியை நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சில மாநிலங்களின் செயல்பாடுகள் தடுத்து நிறுத்துவதாக 'நிதி ஆயோக்' அமைப்பின் தலைவர் அமிதாப் கண்ட் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஆகஸ்ட், 2017 at 4:02 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:16 PM

புதுதில்லி: இந்தியாவின் வளர்ச்சியை நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சில மாநிலங்களின் செயல்பாடுகள் தடுத்து நிறுத்துவதாக 'நிதி ஆயோக்' அமைப்பின் தலைவர் அமிதாப் கண்ட் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தலைநகர் தில்லியில் 'நீடித்த வளர்ச்சிக்கான லட்சியங்களின் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகான நிலை' என்ற தலைப்பில் அமைந்த இரண்டு நாள் கருத்தரங்கம் நடக்கிறது. அதில் இன்று 'நிதி ஆயோக்' அமைப்பின் தலைவர் அமிதாப் கண்ட்  கலந்து கொண்டார். அதில் அவர் தெரிவித்த கருத்துக்களாவன:

நமது நாட்டில் 200 மாவட்டங்கள் மொத்தமாக கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட விவகாரங்களில் முழுவதுமாக தோல்வி அடைந்துள்ளன. இந்த தகவலை நாம் இன்னும் தெளிவாக ஆராய்ந்தால் இந்த மாநிலங்களில் நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்கியை பெற்றுள்ளன; ஆனால் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன என்பது தெரிய வரும்.  

Advertisement

எனவே இவற்றின் மூலம்தான் இந்தியாவின் வளர்ச்சி தடைபடுகிறது என்பது தெரியும். நாம் இதனை மாற்ற விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவின் வளர்ச்சி என்பது மிகவும் சிரமமான ஒன்றாகிவிடும்.

இந்த குறிப்பிட்ட மாவட்டங்கள் அமைந்துள்ள மாநிலங்களில் அரசு சிறப்பாக செயல்படவில்லை என்பதே இதன் பொருள்.இவை தங்கள் செயல்பாட்டினை சீரமைக்காவிட்டால் நீடித்த வளர்ச்சிக்கான லட்சியங்களில் கூட தோல்வியடைய நேரிடும்.

இது தொடர்பாக குறிப்பிட்ட மாவட்டங்கள் மற்றும் அவை அமைந்துள்ள மாநிலங்களில், பல்வேறு  அம்சங்களையும் உள்ளடக்கியதான விரிவான அடிப்படை ஆய்வு ஒன்று நடத்தபட வேண்டும். அது தொடர்பான முடிவுகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அதன் மூலமே சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தவறை உணர்ந்து திருந்த வழி உண்டாகும்      

இது வெறுமனே திட்டங்களுக்கான நிதி ஆதாரம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. நம்மிடம் ஏற்கனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான திட்டங்கள், சுகாதாரம் தொடர்பான பல்வேறு திடங்கள் உள்ளன. அவை அனைத்தும் கடந்த 45ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் அவற்றை  நடைமுறைப்படுத்துதலில் நிலவும் குறைபாடுகளின் காரணமாக ஒட்டு மொத அரசு செயல்பாடுகளின் தரத்தினை அது  குறைக்கிறது.

இதே போல சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசியல் கட்சி சார்ந்தவர்களையும் இதில் குற்றம் சாட்ட வேண்டும். அவர்கள் திருந்தாத பட்சத்தில் அவர்கள் ஆட்சியில் இருந்து அடுத்த தேர்தலில் ஆளும் வாய்ப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.