பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தினால் பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு: இந்திய ராணுவ தலைமைத் தளபதி
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமாகும் என்று இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமாகும் என்று இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலுள்ள தார் பாலைவனத்தில் இந்திய ராணுவம் (தெற்கு பிராந்தியப் பிரிவு), இந்திய விமானப்படை ஆகியவை சார்பில் ஹமேஷா விஜய் என்ற பெயரில் மிகப்பெரிய ஒத்திகை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதை பார்வையிட வந்த விபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
பாகிஸ்தான் முதலில் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். அதன்பிறகு, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் இடத்தை இந்தியா தெரிவிக்கும். பாகிஸ்தானுடனான உறவு மேம்பட வேண்டும் என்பதுதான் நமது நாட்டின் விருப்பமாகும். ஆனால் பாகிஸ்தானோ, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தைப் பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ளது. இதிலிருந்து பாகிஸ்தானுக்கு அமைதி மீது உண்மையில் விருப்பமில்லை என்பது தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம், துணை ராணுவம், காஷ்மீர் போலீஸார் ஆகியோர் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த நடவடிக்கை தொடரும் என்றார் ராவத்.
இதனிடையே, தார் பாலைவனத்தில் ராணுவமும், விமானப் படையும் கூட்டாக நடத்திய ஒத்திகையை ராவத் பார்வையிட்டார். எதிரி நாட்டின் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தும் திறன்கள் இந்திய ராணுவத்துக்கு உள்ளதா? என்று பரிசோதிக்கும் வகையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.