கொகிமா: நாட்டின் வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வன்முறைகளால் அரசு அலுவலகங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
விரைவில்நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக நாகலாந்து மாநிலத்தில் இன்று வன்முறை வெடித்தது. தலைநகர் கொகிமா முழுவதும் வன்முறை பரவி உள்ளது.
சட்டசபையை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். அந்த சமயத்தில் நாகாலாந்து மாநில முதல்வர் டி.ஆர். ஜீலியாங், மற்றும் பிற மந்திரிகள் சட்டசபையில் இருந்தனர். போராட்டக்காரர்கள் செல்லும் வழியில் இருந்த அரசு அலுவலகங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர் . நிறைய அரசு அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன .
புதிய தலைமைச் செயலகம் அமைந்துள்ள பகுதியில் தற்போது மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.
முன்னதாக நேற்று இரவு போலீஸ் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே நடைபெற்ற மோதலில் இருவர் உயிரிழந்தனர், 10 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து மாநிலத்தின் வர்த்தக தலைநகர் திமாபூரில் 144 தடை உத்தரவு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது மாநிலம் முழுவதும் மொபைல் இன்டர்நெட் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான , கூடுதல் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.