முகப்பு
இந்தியா

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: உச்சகட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் காஷ்மீர்

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரில் உச்சகட்ட பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:25 PM
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஜம்முவில் பாதுகாப்புப் பணியில் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ள துணை ராணுவப் படையினர். நாள்': புதன்கிழமை.
பகிர்:

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரில் உச்சகட்ட பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் பயணம் செய்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் சிலர் கடந்த திங்கள்கிழமை கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இதில் 6 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகினர். 19 பேர் காயமடைந்தனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் அந்த மாநிலத்தில் பதற்றான சூழல் நிலவுகிறது.
இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. நிலைமையைக் கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி ஆகியோர் அந்த மாநிலத்துக்கு விரைந்தனர்.
இந்தச் சூழலில் பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங், மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் உள்ளிட்டோர் காஷ்மீருக்கு புதன்கிழமை சென்றனர். பாதுகாப்பு நிலவரம் குறித்தும், சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர். முன்னதாக மாநில ஆளுநர் என்.என்.வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி ஆகியோரையும் அவர்கள் சந்தித்துப் பேசினர். மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) உள்ளிட்ட துணை ராணுவப் படைகளின் உயரதிகாரிகளிடமும் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது சில அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு அவர்கள் வழங்கியதாகத் தெரிகிறது. குறிப்பாக, பயங்கரவாதத் தாக்குதல் நடக்காத வண்ணம் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்குமாறு துணை ராணுவப் படையினருக்கு மத்திய அமைச்சர்கள் உத்தரவிட்டனர். மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதனிடயே, ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் ஜிதேந்தர் சிங், 'இத்தகைய தீவிரவாத நடவடிக்கைகள் பிற மாநிலங்களிலும் இருந்தன; ஆனால், அவை ஒருகட்டத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டன;
தற்போது காஷ்மீரில் தீவிரவாதம் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்; விரைவில் அங்கும் அது முழுமையாக ஒழிக்கப்படும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.