பிகார்: 12-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் கைது
பிகாரில் ஏமாற்று நடவடிக்கை மூலம் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கலையியல் பிரிவில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவர் கணேஷ் குமார் கைது செய்யப்பட்டார்.
பிகாரில் ஏமாற்று நடவடிக்கை மூலம் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கலையியல் பிரிவில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவர் கணேஷ் குமார் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, கடந்த ஆண்டில் முதலிடம் பிடித்த மாணவி ரூபி ராயும் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது. பிகாரில் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்வது, மாணவர்கள் ஏமாற்றி தேர்வுகளில் வெற்றி பெற பெற்றோர், உறவினர்கள் உதவுவது உள்ளிட்டவை வழக்கமான நிகழ்வுகளாக உள்ளன.
இந்நிலையில், இந்த ஆண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் கணேஷ் குமாரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
அவர் போலியான ஆவணங்களைக் கொடுத்து தேர்வு எழுதியதாக பிகார் மாநில மேல்நிலைக் கல்வி வாரியம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதை அடுத்து இந்த ஆண்டில் கடுமையான கண்காணிப்பின்கீழ் தேர்வு நடத்தப்பட்டது. எனினும், தொடர்ந்து இந்த ஆண்டிலும் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவர் முறைகேடு பிகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் பிகாரில் 12-ஆம் வகுப்புத் பொதுத் தேர்வில் 64 சதவீதம் பேர் தோல்வியடைந்துவிட்டனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி ரூபி ராய் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, தான் படித்த 'பொலிட்டிக்கல் சயின்ஸ்' பாடத்தின் பெயரைக் கூட சரியாகக் கூறவில்லை. மேலும், அது சமையல் தொடர்பான படிப்பு என்று கூறினார்.
இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் அவர் ஏமாற்று நடவடிக்கைகள் மூலம் தேர்வில் முதலிடம் பிடித்தது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.