வாரங்கல்: தெலங்கானா மாநிலம் உதயமானதன் 3ம் ஆண்டு விழாவில் பங்கேற்றிருந்த துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரி திடீரென மயக்கமடைந்தார்.
தெலங்கானா காவல்துறை பேரணி மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவின் போது தெலங்கானா அரசின் வளர்ச்சி அறிக்கை வாசிக்கப்பட்டது. முன்னதாக காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, உரையாற்றிய ஸ்ரீஹரி திடீரென மேடையில் சரிந்து விழுந்தார்.
உடனடியாக அவர் காருக்குள் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்த மருத்துவர்களால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நினைவு திரும்பியது. சிறிது நிமிடம் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் பிறகு தனது உரையை தொடர்ந்தார்.
அதிக வெப்பம் காரணமாகவே அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். பிறகு சகஜ நிலைக்குத் திரும்பிய ஸ்ரீஹரி, திட்டமிட்டபடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.