முகப்பு
இந்தியா

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஆறு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:48 PM
பகிர்:

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஆறு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.

இது குறித்து மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், எம்.தண்டபாணி, புதுச்சேரி தெய்வசிகாமணி ஆதிகேசவலு ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக மூப்பு அடிப்படையில், அவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேற்கண்ட ஆறு பேரில் பவானி சுப்பராயன், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணியாற்றி வருபவர். ஜெகதீஷ் சந்திரா, தமிழக அரசின் முன்னாள் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றியவர். ஜி.ஆர்.சுவாமிநாதன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி வருபவர். அப்துல் குதோஸ் தமது குடும்பத்தில் இரண்டாம் தலைமுறையாக நீதித்துறைக்கு வந்துள்ளவர். எம். தண்டபாணி, மத்திய அமலாக்கத் துறை சார்பில் அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு உள்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வந்தவர். தெய்வசிகாமணி ஆதிகேசவலு, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசுவாமியின் வழக்குரைஞர் குழுவில் இளநிலை வழக்குரைஞராகப் பணியாற்றி வருபவர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதிகளின் பணியிடங்கள் உள்ளன. இதில், மேற்கண்ட ஆறு பேரும் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டால், 48 ஆக இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்துக்கு மூன்று கூடுதல் நீதிபதிகள், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கு இரண்டு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →