சரக்கு - சேவை வரியினால் (ஜிஎஸ்டி) மின் கட்டணம் உயர்வதற்கு வாய்ப்பில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை கொண்டு வரும் வகையில் சரக்கு - சேவை வரி ஜூலை முதல் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து 75 தொழில் துறை அமைப்புகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், சரக்கு - சேவை வரி அமலாக்கத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று எந்தவொரு அமைப்பும் கோரிக்கை விடுக்கவில்லை.
மேலும், நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடைபெறவுள்ள பெரிய அளவிலானதும், வெளிப்படையானதுமான இந்த வரி சீர்திருத்தத்துக்கு ஒட்டுமொத்த தொழில்துறையும் வரவேற்பு தெரிவித்துள்ளது. சரக்கு - சேவை வரி அமல்படுத்துவது தொடர்பாக ஒரு சில பிரச்னைகளைத் தவிர, பெரும்பாலானவை தீர்க்கப்பட்டுவிட்டன.
மின்கட்டணம் உயருமா?: சரக்கு - சேவை வரிக்கும், மின் கட்டணத்துக்கும் தொடர்பில்லை. எனவே, இந்த வரிவிதிப்பு முறையினால் மட்டுமே மின் கட்டணம் உயர்வதற்கு வாய்ப்பில்லை.
நிலக்கரி மீதான சரக்கு - சேவை வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மின் கட்டணம் குறைய வாய்ப்புண்டா? என்று கேள்வியெழுப்பப்படுகிறது.
நிலக்கரி மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால், அதன் பயன்கள் மின் நுகர்வோரை சென்றடைவது தொடர்பாக அனைத்து மாநில மின்சார வாரியங்களின் கூட்டமைப்புடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளேன் என்றார் பியூஷ் கோயல்.