இன்னும் 4 நாட்களில் ஏசி, முதல் வகுப்பு ரயில் கட்டணங்கள் உயரும்
ஜூலை 1ம் தேதி முதல் ரயிலில் குளிர்சாதன வசதி மற்றும் முதல் வகுப்பு ரயில் பயணத்துக்கான கட்டணங்கள் உயரும் நிலை உள்ளது.
சென்னை: ஜூலை 1ம் தேதி முதல் ரயிலில் குளிர்சாதன வசதி மற்றும் முதல் வகுப்பு ரயில் பயணத்துக்கான கட்டணங்கள் உயரும் நிலை உள்ளது.
அதாவது, தற்போது ரயிலின் குளிர்சாதன வசதி மற்றும் முதல் வகுப்புப் பயணத்துக்கான சேவைக் கட்டணம் 4.5% ஆக உள்ளது. ஆனால், ஜிஎஸ்டி வரி விதிப்பினால் இது 5% ஆக உயரும்.
அதே சமயம், ஜூலை 1ம் தேதிக்குப் பிறகான பயணத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்தவர்கள், இந்த கூடுதல் சேவைக் கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பிறகு டிக்கெட் எடுப்பவர்களும், முன்பதிவு செய்பவர்களுக்குமே இந்த விலை ஏற்றம் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஆனால், ஜூலை 1ம் தேதிக்கு முன் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை, ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு ரத்து செய்தால், ரத்து செய்வதற்கான ஜிஎஸ்டி வரித் தொகை பிடித்தம் செய்த பிறகு மீதத் தொகையே திரும்ப வழங்கப்படும்.
அதே அறிவிப்பில், ஜூலை 1ம் தேதி முதல் பயணிகள், குளிர்சாதன வசதி மற்றும் முதல் வகுப்பில் ரிடர்ன் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.