இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பற்றாக்குறை: மத்திய அரசு தகவல்
இந்தியாவில் தற்போது 1,400 ஐஏஎஸ் பதவிக்கும், 900 ஐபிஎஸ் பதவிக்கும் பற்றாக்குறை நிலவுவதாக மத்திய இணை அமைச்சர் ஜேதேந்திர சிங் கூறியுள்ளார்.
புது தில்லி: இந்தியாவில் தற்போது 1,400 ஐஏஎஸ் பதவிக்கும், 900 ஐபிஎஸ் பதவிக்கும் பற்றாக்குறை நிலவுவதாக மத்திய இணை அமைச்சர் ஜேதேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்தியாவில் நிர்வாகத் துறையில் (ஐஏஎஸ்) மொத்தமுள்ள 6,396 பதவியிடங்களில் தற்போது 4,936 அதிகாரிகள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். எனவே, 1,470 நிர்வாகக் காலியிடங்கள் உள்ளதாக மக்களவையில் அமைச்சர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.
இதில் பிகார் மாநிலத்தில் அதிகபட்சமாக 128 காலிப்பணியிடங்களும், உத்தரப்பிரதேசத்தில் 117 இடங்களும், மேற்கு வங்கத்தில் 101 இடங்களும் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய காவல்துறை நிர்வாகத்தில் மொத்தமுள்ள 4,802 பதவியிடங்களில் தற்போது 3,894 ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் 908 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேசம் 114 காலிப் பணியிடங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா, கர்நாடகா அடுத்த இடங்களில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.