முகப்பு
இந்தியா

உ.பி.யில் செல்ஃபி எடுத்த 3 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம்: ஏன் தெரியுமா?

உத்தரப்பிரதேசத்தில் பலாத்காரத்துக்கு உள்ளாகி, ஆசிட் வீசப்பட்ட பெண்ணுக்கு அருகே காவலுக்கு இருந்த 3 பெண் காவலர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:19 AM
பகிர்:


லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் பலாத்காரத்துக்கு உள்ளாகி, ஆசிட் வீசப்பட்ட பெண்ணுக்கு அருகே காவலுக்கு இருந்த 3 பெண் காவலர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பலாத்காரத்துக்கு உள்ளாகி, முகத்தில் ஆசிட் வீசப்பட்டு குணமடைந்து வந்த 45 வயது பெண்ணை, குற்றவாளிகள் அலகாபாத் - லக்னௌ கங்கா கோமதி விரைவு ரயிலில் ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்ய முயன்றனர்.

இதில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு அருகே 3 பெண் காவலர்கள் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்தனர்.

மருத்துவமனை படுக்கையில் பாதிக்கப்பட்ட பெண் படுத்திருந்த நிலையில், அதன் அருகே 3 பெண் காவலர்களும் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக தளத்தில் வெளியானதை அடுத்து மூன்று பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

2009ம் ஆண்டு ரேபரேலியைச் சேர்ந்த பெண், சொத்து தகராறில், இரண்டு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆசிட் வீச்சுக்கு ஆளானார்.

இதையடுத்து மீண்டும் இவர் மீது 2012ம் ஆண்டில் குற்றவாளிகள் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றனர். அதில் காயத்துடன் தப்பிய அப்பெண் மீது, 2013ம் ஆண்டு ஆசிட் ஊற்றினர்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ரயில் நிலையத்துக்கு அருகே அதே குற்றவாளிகள் அப்பெண்ணை ஆசிட்டை குடிக்க வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தரவும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.