முகப்பு
இந்தியா

துணிச்சல் மிகுந்தவர் வாஜ்பாய்: பொக்ரான் அணுகுண்டு சோதனை தினத்தையொட்டி மோடி பாராட்டு

பொக்ரான் அணுகுண்டு சோதனையை மிகுந்த துணிச்சலுடன் நடத்தியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

Updated On : 12 மே, 2017 at 2:49 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:00 PM

பொக்ரான் அணுகுண்டு சோதனையை மிகுந்த துணிச்சலுடன் நடத்தியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், கடந்த 1998-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. அன்றைய தினம் 3 அணுகுண்டுகள் அடுத்தடுத்து சோதித்துப் பார்க்கப்பட்டன.
அமெரிக்காவின் உளவு அமைப்புகளுக்குக்கூடத் தெரியாத வகையில் நிகழ்ந்த இந்தச் சோதனையை அடுத்து, அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதித்தன.
அதன் பிறகும் அசராமல், அடுத்த இரு தினங்கள் கழித்து (மே 13) மேலும் 2 அணுகுண்டுகளை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்தது. அத்துடன், இந்தியா அணு ஆயுத வல்லமை நாடு என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் அறிவியல் ஆற்றலையும், தொழில்நுட்ப மேம்பாட்டையும் பறைசாற்றும் வகையில், கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பொக்ரான் அணுகுண்டு சோதனை தினமான மே 11-ஆம் தேதி, தேசியத் தொழில்நுட்ப தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசியத் தொழில்நுட்ப தினத்தையொட்டி பிரதமர் மோடி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:
தேசியத் தொழில்நுட்ப தினத்தையொட்டி, அனைவருக்கும், குறிப்பாக கடின உழைப்பாளிகளான நமது விஞ்ஞானிகளுக்கும் தொழில்நுட்பத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்.
கடந்த 1998-இல் துணிச்சலுடன் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்திய அன்றைய ஆட்சித் தலைமைக்கும் (அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும்), நமது விஞ்ஞானிகளுக்கும் நாம் என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன், நரேந்திரமோடிடாட்இன் என்ற தனது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
பொக்ரான் அணுகுண்டு சோதனைகளை உலகம் நன்கு அறியும். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையின்கீழ் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட அந்தச் சோதனைகள் மூலம் இந்தியாவின் வலிமையை உலகம் உணர்ந்துகொண்டது. நமது விஞ்ஞானிகள், நாட்டைப் பெருமிதம் கொள்ளச் செய்தார்கள்.
முதலில் மே 11-ஆம் தேதி நிகழ்த்திய அணுகுண்டு சோதனையை அடுத்து உலக நாடுகள் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதித்தன.
ஆனால், மே 13-ஆம் தேதி மீண்டும் சோதனைகளை நிகழ்த்தி, தான் வித்தியாசமானவர் என்பதை வாஜ்பாய் நிரூபித்தார்.
வேறு பலவீனமான பிரதமராக இருந்திருந்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதும் பயந்திருப்பார். ஆனால் அடல்ஜி தான் அச்சமற்றவர் என்பதை உணர்த்தினார்.
அணுகுண்டு சோதனைகளின்போது அமைதி காத்த பொக்ரான் மக்களும் பாராட்டுக்குரியவர்கள். மற்ற எல்லாவற்றையும்விட தேசத்தின் நலனே மேலானது என்பதை அவர்கள் சாதித்துக் காட்டியுள்ளனர் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.