ராஜஸ்தான்: ராஜஸ்தானில் திருமண மண்டப சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தார்கள். 28 பேர் காயமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் 90 அடி நீளமும், 12-13 அடி உயரமும் கொண்ட சுவர் நேற்று இரவு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 4 குழந்தைகள் மற்றும் 11 ஆண்கள், 8 பெண்கள் உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்தவர்கள் ஜெய்ப்பூர் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டனர். வானிலையின் திடீர் மாற்றத்தின் காரணமாக பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக இந்த விபத்து நிகழ்த்திருக்க வாய்ப்புள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
சுவர் அருகே பல உணவு கடைகளும் அமைக்கப்பட்டன. சுவரின் ஒரு பகுதிக்கு ஒரு தகரம் கொட்டையும் இணைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் என்.கே.குப்தா, ஐ.ஜி மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர் அனில் டேங்க் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
எதிர்பாராத வகையில் திடீரென நடந்த இந்த துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த முதல்வர் வசுந்தரா ராஜே, காயமடைந்தவர்களுக்கு தேவையான உயர் சிகிச்சைகள் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை அளிக்குமாறு உயர் அதிகாரிகளிக்கு உத்தரவிட்டுள்ளார்.