மதுரை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என்று மத்திய பள்ளிக் கல்வி வாரியத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நாடெங்கும் மருத்துவ படிப்புகள் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்வதற்கு நீட் எனப்படும் நாடு தழுவிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அவசியம் என்று மத்திய அரசு சட்டமியற்றியது அதன்படி இந்தியா முழுமைக்கும் இந்த மாதம் 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.
ஆனால் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமையவில்லை;எனவே இதனை முழுமையான தகுதித் தேர்வாக கருத முடியாது; ரத்து செய்ய வேண்டும் என்று திருச்சியைச் சேர்ந்த சக்திமலர்கொடி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை இன்று விசாரணை செய்த உயர்நீதிமன்ற கிளையானது மனுதாரரின் வாதத்தினை ஏற்றுக் கொண்டு மத்திய பள்ளிக்கல்வி வாரியம், தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அத்துடன் நீட் தேர்வு முடிவை வெளியிடுவதற்கான பணிகளால் ஈடுபடக் கூடாது என்று மத்திய பள்ளிக்கல்வி வாரியதிற்கு இடைக் காலத் தடை விதித்து உத்தரவிட்டது.