சர்வதேச இந்திய உணவுத்துறை மாநாடு 2017: '800 கிலோ கிச்சடி' கிளறி உலக சாதனை!
தில்லியில் நடைபெற்ற சர்வதேச இந்திய உணவுத்துறை மாநாட்டில் 800 கிலோ கிச்சடி கிளறப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது.
தில்லியில் சர்வதேச இந்திய உணவுத்துறை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ஹர்ஸிம்ராத் கவுர் பாதல், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், பிரபல சமையல் கலைஞர்கள் இமிதியாஸ் குரேஷி மற்றும் ரன்பீர் ப்ரார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது 800 கிலோ கிச்சடி கிளறப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. இதனை தில்லியில் உள்ள 10 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இதற்காக 25 கிலோ நெய், 1 கிலோ மஞ்சள் மற்றும் 500 கிராம் கிராம்பு ஆகியவை பதஞ்சலி சார்பில் வழங்கப்பட்டது. மத்திய உணவு அமைச்சகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூர் இந்த கிச்சடியைச் சமைத்தார்.
Advertisement
இந்த நிகழ்வில் தயார் செய்யப்பட்ட இந்த கிச்சடி, தில்லியில் உள்ள 10,000 ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. கிச்சடி பெரிய அளவில் பிரசித்தம் இல்லை என்றாலும் அது சிறந்த சத்துக்களைக் கொண்டது. நாடு முழுவதும் இருந்து எடுத்துவரப்பட்ட சத்தான தானியங்களால் இந்தக் கிச்சடி சமைக்கப்பட்டது என மத்திய உணவுத்துறை அமைச்சர் ஹர்ஸிம்ராத் கவுர் பாதல் கூறினார்.
இந்த நிகழ்வின் காரணமாக கிச்சடி உணவு உலக அரங்கின் கவனத்தை ஈர்க்கும். மேலும் இதனால் கிச்சடி சமைக்கப்பட்டது, உருவானது மற்றும் உணவளிக்கப்பட்டது என உலக சாதனை படைத்துவிட்டது என்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்தார்.