விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!
அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளத்திற்குப் பதிலாக லினக்ஸ் இயங்குதளத்திற்கு மாறவிருப்பதாக பிரான்ஸ் அறிவிப்பு.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கணினி பயன்பாட்டு இயங்குதளமான விண்டோஸ் பயன்பாட்டை தவிர்த்து திறந்தநிலை இயங்குதளமான லினக்ஸ்-ஐ பயன்படுத்த இருப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இதன்மூலம், அமெரிக்க தொழில்நுட்பங்களைச் சார்ந்து இருப்பதை குறைக்க முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
லினக்ஸ் இயங்குதளம் இலவசமாக தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. மேலும், இதனை நமது வசதிக்கு ஏற்றவாறு தனிப் பயன்பாட்டு முறைகளை மாற்றிக்கொள்ளும் விதமாக பயனர்களுக்கு எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதுபற்றி பிரான்ஸ் அமைச்சர் டேவிட் அமீல் கூறுகையில், ”அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, நமது டிஜிட்டல் எதிர்காலத்தின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நமது தரவுகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் மீதான கட்டுப்பாடுகள் நம்மிடம் இல்லை என்பதை இனிமேலும் ஏற்றுக்கொள்ள முடியாது” அவர் தெரிவித்தார்.
இயங்குதளம் மாற்றப்படுவது பற்றிய காலக்கெடு தொடர்பான தகவல்களை பிரான்ஸ் அரசு தெரிவிக்கவில்லை. இந்த மாற்றம் அரசு அலுவலகங்களில் இருந்து தொடங்கவுள்ளது.
முன்னதாக அரசு ரீதியாக நடத்தப்படும் காணொலி வாயிலான கூட்டங்களுக்கு ’மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்’-க்கு பதிலாக பிரான்ஸில் உருவான விசியோ எனப்படும் செயலியைப் பயன்படுத்த இருப்பதாக சில மாதங்களுக்கு முன் பிரான்ஸ் அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இயங்குதள மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுபற்றி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்போது வரை கருத்து தெரிவிக்கவில்லை.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அதிகரித்து வரும் உறுதியின்மை மற்றும் கணிக்க முடியாத நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான தனது சார்பு தன்மையைக் குறைத்து தங்களது எல்லைகளுக்குள் உருவான தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சியை பிரான்ஸ் மேற்கொண்டுள்ளது.
ஐரோப்பா முழுவதும் அரசு நிர்வாகத்தினர் மற்றும் அதிகார மட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த நாட்டில் உள்ள அச்சுறுத்தல் பற்றியும், அமெரிக்க தொழில்நுட்பம் மீதான அதீத சார்புநிலை பற்றியும் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், வெளிநாட்டு சேவைகள் மீதான சார்பு நிலையைக் குறைத்து அதற்கு மாற்று யோசனைகளை முன்னெடுக்கும் அறிக்கையை ஐரோப்பிய ஆணையத்திடம் கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றம் வழங்கியது.
அமெரிக்க அதிபராக 2-வது முறை பதவியேற்றது முதல் டிரம்ப் உலகத் தலைவர்கள் மீதான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளார். வெனிசுலா அதிபரை சிறைபிடித்தது, ஈரான் அதிபரின் படுகொலைக்குத் துணைநின்றது என அவர் தனது அதிகாரத்தை மோசமாக பயன்படுத்தியுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் உள்பட தன்னை விமர்சிப்பவர்கள், எதிர்பவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிப்பதை அவர் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்.
இதன் மூலம், அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் மேற்கொள்வதை அவர் துண்டிப்பதால் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகும் நாடுகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அமெரிக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலிருந்து துண்டிக்கப்படுகின்றனர். மேலும், வேறு அமெரிக்க சேவைகளைப் பயன்படுத்துவதிலிருந்தும் அவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரான்ஸ் அரசின் முடிவு முக்கியமான முன்னெடுப்பாக கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி, சுகாதாரத் துறையின் தரவுகள் கொண்ட இணையதளத்தையும் புதிய நம்பகமான தளத்திற்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.