மாசு எதிரொலி: மத்திய, 3 மாநில அரசுகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தில்லியில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக மத்திய மற்றும் 3 மாநில அரசுகளுக்கு மனித உரிமை ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
தில்லியில் காற்றில் மாசு அளவு அதிகரித்து அதனால் நச்சுத் தன்மை ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்குள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் இருதயக் கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. சுவாசப் பிரச்னைகள் மட்டுமல்லாது தோல் நோய்களும் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
இதன் தாக்கம் பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தில்லியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு ஒற்றை இலக்க வாகன நடைமுறை மீண்டும் ஏற்படுத்தப்பட்டது.
மேலும், காற்றில் உள்ள மாசு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் தேவையின்றி வெளிப்பகுதிகளில் அதிகம் நடமாட வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில், காற்றில் ஏற்பட்டுள்ள இந்த மாசு காரணமாக மத்திய அரசு மற்றும் தில்லி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய 3 மாநில அரசுகளுக்கும் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம், வனத்துறை மற்றும் 3 மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோருக்கு இவ்விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக அடுத்த 2 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.