முகப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

நாட்டிலேயே ரயில் பாதை இல்லாத ஒரே சட்டப்பேரவைத் தொகுதி திருப்பத்தூர் தான் என அண்ணாமலை கூறியது...

Updated On : 12 ஏப்ரல் 2026, 10:37 pm IST
திருப்பத்தூரில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் கே.சி. திருமாறனை ஆதரித்து பிரசாரம் செய்த கே. அண்ணாமலை. - ட்விட்டர்
பகிர்:

நாட்டிலேயே ரயில் பாதை இல்லாத ஒரே சட்டப்பேரவைத் தொகுதி திருப்பத்தூர் தான். இத்தனை ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் கே.ஆர்.பெரியகருப்பன் அதற்காக ஒருமுறையாவது கோரிக்கை வைத்திருக்கிறாரா? ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறாரா? என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

திருப்பத்தூர் தொகுதியில் என்டிஏ கூட்டணியில் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவரும் வேட்பாளருமான கே.சி. திருமாறனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை கே. அண்ணாமலை பிரசாரம் செய்தார்.

அப்போது அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

திருப்பத்தூர் தொகுதியில் 2006 ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தும் தொகுதியின் வளர்ச்சிக்காக எதுவும் செய்ய வக்கற்ற ஒரு சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கிறார் கே.ஆர்.பெரியகருப்பன். இந்த பகுதியில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க திமுக அரசும் அமைச்சர் பெரியகருப்பனும் என்ன செய்தார்கள்?

எனினும், நமது மத்திய பாஜக அரசு சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார்கள். ஆனால், அதையும் தடுத்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவிடாமல் செய்துள்ளனர். அதற்கு காரணம், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவரது மனைவி பெயரில் கிரிஷ் ஆக்வா எனும் தண்ணீர் கம்பெனி வைத்திருப்பது தான். தனது குடும்பத்தின் நிறுவனம் வளரவேண்டும் என்பதற்காக, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் திட்டத்தை முடக்கியுள்ளனர். இப்படி சுயநலமிக்க மோசமான திமுக கும்பலிடம் இருந்து திருப்பத்தூர் தொகுதியை நாம் பாதுகாக்க வேண்டும்.

இந்தியாவிலேயே ரயில் பாதை இல்லாத ஒரே சட்டப்பேரவைத் தொகுதி திருப்பத்தூர் தான். இத்தனை ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் பெரியகருப்பன் அதற்காக ஒருமுறையாவது கோரிக்கை வைத்திருக்கிறாரா? ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறாரா? நான் திருப்பத்தூர் மக்களுக்கு உறுதியளிக்கிறேன். நமது வெற்றி வேட்பாளர் கே.சி. திருமாறன் வெற்றி பெற்ற பிறகு, அந்த வெற்றி விழாவில் நமது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரடியாக வருவார். திருப்பத்தூர் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வளர்ச்சியடைந்த திருப்பத்தூர் தொகுதி உருவாகும்.

அதை நடத்திக்காட்ட வேண்டும் என்றால், திருப்பத்தூர் மக்கள் அனைவரும் ஒருசேர கே.சி. திருமாறனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

summary

Tiruppattur is the only Assembly constituency in the entire country that lacks a railway line. Has K.R. Periyakaruppan—who has served as both an MLA and a Minister for so many years—ever once raised a demand for this?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.