நகர்ப்புறங்களில் வாழும் பெண்களை விட ஆண்கள் மன அழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக ஹைதராபாதில் உள்ள தேசிய ஊட்டச்சத்து கல்வி நிறுவனத்தின் (என்ஐஎன்) ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
நாட்டு மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள், மது, புகையிலைப் பழக்கம், நோய் பாதிப்பு உள்ளிட்டவை தொடர்பாக தேசிய ஊட்டச்சத்து கண்காணிப்பு அமைப்பு (என்என்எம்பி) கடந்த 2015-16-இல் விரிவான ஆய்வை நடத்தியது.
நாடு முழுவதும் 16 மாநிலங்களில் உள்ள 52,577 குடும்பங்களைச் சேர்ந்த 1.72 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் சமூக அந்தஸ்து, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கண்டறியப்பட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய ஊட்டச்சத்து கல்வி நிறுவனம் ஓர் அறிக்கையைத் தயாரித்து, ஹைதராபாதில் கடந்த வாரம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நகர்ப்புறங்களில் வாழும் ஆண்களில் 31 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களில் 26 சதவீதம் பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளத்தில் இந்த பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அது 31 முதல் 39 சதவீதமாக இருக்கிறது. பிகாரில் மன அழுத்த பாதிப்பு குறைவாக (16 முதல் 22 சதவீதம்) உள்ளது.
நாட்டில் உள்ள 16 சதவீதம் பேர் புகையிலையில் இருந்து தயாரிக்கப்படும் பீடி, சிகரெட், சுருட்டு உள்ளிட்டவற்றைப் பிடிக்கின்றனர். 30 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர்.
ஆண்களில் 22 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களில் 19 சதவீதம் பேர் இந்நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இது அதிக உடல் எடை, உடல்ரீதியில் இயங்காமல் இருத்தல், ரத்தத்தில் லிபோபுரோட்டீன் மற்றும் கொழுப்பு அளவுக்கு அதிகமாக இருத்தல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ளது