நாட்டுக்குக் கிடைத்த வள்ளல்! பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
நாட்டில் உள்ள ஏழை மக்களை பொருளாதாரரீதியாக மேம்படுத்த பாடுபட்டு வரும் பிரதமர் மோடிதான் உண்மையான வள்ளல் என்று மத்திய கலாசாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா பாராட்டியுள்ளார்.
நாட்டில் உள்ள ஏழை மக்களை பொருளாதாரரீதியாக மேம்படுத்த பாடுபட்டு வரும் பிரதமர் மோடிதான் உண்மையான வள்ளல் என்று மத்திய கலாசாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா பாராட்டியுள்ளார்.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதை கெளரவமாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலையான வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற மகேஷ் சர்மா, பார்வையாளர்களிடையே பேசியதாவது:
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது இருக்க வேண்டும். அதாவது, அடித்தட்டு மக்களும், சாமானிய மக்களும் வாழ்வில் மேம்படுவதுதான் நிலையான வளர்ச்சியாக இருக்க முடியும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அத்தகைய வளர்ச்சியை அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்திய ஜனநாயகத்தில் உள்ள அனைத்து பலன்களையும் ஏழை-எளிய மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் சேவையை பிரதமர் மோடி ஆற்றி வருகிறார்.
சொல்லப்போனால், அவர்தான் தன்னலம் கருதாத உண்மையான துறவி. மக்களுக்கு நலன்களை அள்ளித் தரும் வள்ளல். அவரது தலைமையிலான அமைச்சரவையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கம் வகிப்பது எனக்கு கிடைத்த கெளரவமாகவே கருதுகிறேன் என்றார் மகேஷ் சர்மா.