மும்பை: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் மனைவி மெஹஜபின் ஷைக், மும்பையில் வசிக்கும் தனது தந்தையை கடந்த ஆண்டு சந்தித்து திரும்பிய சம்பவம் நடந்துள்ளது.
1993-ஆம் ஆண்டில் மும்பையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் தாவூத் இப்ராஹிம். அவரும் ,அவரது சகோதரர் அனீஸ் இப்ராஹிம் மற்றும் அவர்களது நண்பன் சோட்டா ஷகீல் ஆகிய மூவரும் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தாவூத் இப்ராஹிமின் சகோதரரான காஸ்கர் ஆள்கடத்தல் வழக்கு ஒன்றில் இவ்வார துவக்கத்தில் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். தானே குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வரும் விசாரணையில்தான் அவர் மேற்கூறிய தகவல்களை தெரிவித்துள்ளார்
நேற்றைய விசாரணையின் பொழுது அவரது மூத்த அண்ணன் தாவூத் இப்ராஹிம், அவரது சகோதரர் அனீஸ் இப்ராஹிம் மற்றும் அவர்களது நண்பன் சோட்டா ஷகீல் ஆகிய மூவரும் பாகிஸ்தானில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக காஸ்கர் தெரிவித்தார்.
அத்துடன் அது தொடர்பாக நான்கு முகவரிகளையும் கொடுத்தார். அதேபோல இன்றும் தொடர்ந்த விசாரணையில் தாவூத் இப்ராஹிமின் மனைவி மெஹஜபின் ஷைக், மும்பையில் வசிக்கும் அவரது தந்தை சலீம் காஷ்மீரியினை, கடந்த ஆண்டு மத்தியில் வந்து சந்தித்தார் என்று கூறியுள்ளார்.
சந்திப்புக்குப் பிறகு அவர் இந்தியாவிலிருந்து அமைதியாக வெளியேறி விட்டார் என்பதையும் காஸ்கர் கூறியுள்ளார்.