பினாமி சொத்துகள் தொடர்பாக விசாரணை அமைப்புகளுக்கு ரகசியத் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 கோடி வெகுமதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரி ஒருவர், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பினாமி சொத்துகள் குறித்து விசாரணை அமைப்புகளுக்கு ரகசியத் தகவல் அளிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.1 கோடி வரை வெகுமதி அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கருதி தகவல் அளிப்பவர்கள் குறித்து தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். பினாமிகளை இனம் கண்டறிவது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. எனவே, இதுபோன்ற முறையைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கும் முறையை வருமான வரித் துறையும், அமலாக்கத் துறையும் ஏற்கெனவே பின்பற்றி வருகின்றன.
இதுபோன்ற அதிக தொகையை வெகுமதியாக அளிக்க முன்வரும்போது பினாமிகளைக் கண்டறியும் பணி எங்களுக்கு எளிமையாகிறது.
இந்தத் திட்டத்துக்கு மத்திய நிதி அமைச்சகமும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.