ரோஹிங்கயா அகதிகளுக்கு அடிப்படை வசதிகள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தில்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் உள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாம்களில் செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து 4 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
தில்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் உள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாம்களில் செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து 4 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியிலும், ஹரியாணா மாநிலத்தில் மேவாட், ஃபரீதாபாத் ஆகிய நகரங்களிலும் ரோஹிங்கயா அகதிகள் முகாம்கள் இயங்கி வருகின்றன.
இந்த முகாம்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால், முதியவர்களும், சிறுவர்களும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்படுகின்றனர் என்று ரோஹிங்கயா அகதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேற்கண்ட உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை, மே மாதம் 9-ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
இதற்கு முன், இலங்கை அகதிகளுக்கு தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவ வசதிகள் அளிக்கப்படுவதுபோல், ரோஹிங்கயா அகதிகளுக்கும் வசதிகள் செய்துதர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ரோஹிங்கயா அகதிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அந்த மனுவை கடந்த மாதம் 19-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக, மத்திய அரசு முடிவு செய்யாத வரை, எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து விட்டது.
இதுபோன்ற உத்தரவால், இந்தியா-மியான்மர் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது.