விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த காஷ்மீர் ராணுவ வீரர் பற்றிய திடுக்கிடும் தகவல்
காஷ்மீரைச் சேர்ந்த ராணுவ வீரர், பிகாரில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்றவர், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு: காஷ்மீரைச் சேர்ந்த ராணுவ வீரர், பிகாரில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்றவர், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 9 மாதங்களில், இந்திய ராணுவத்தில் இருந்து, பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த 2வது வீரர் இவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோஃபியான் மாவட்டத்தைச் சேர்ந்த மிர் இட்ரீஸ் சுல்தான், தனது கையில் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்ததற்கான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Advertisement
இட்ரீஸ் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்து பிகாரில் பணியாற்றி வந்துள்ளார். இதனால், அவர் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ராணுவத்தில் பணியில் சேர்வதற்கு முன்பே அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருந்ததா? முக்கிய ராணுவ ரகசியங்களை உளவு பார்க்க ராணுவத்தில் இணைந்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளும் எழுகின்றன.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், இட்ரீஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்று குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.