சம்மர் கேம்பால் ஏற்பட்ட சோகம்: புணே அணையில் மூழ்கி 3 மாணவர்கள் சாவு
சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் புணேவிலுள்ள அணையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையைச் சேர்ந்த ஈசிஎஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியைச் சேர்ந்த 13 முதல் 16 வயதுடைய 20 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்கள் சம்மர் கேம்ப் ஒரு வார கால சுற்றுலாவுக்கு புணேவில் உள்ள முல்ஷி தாலுக்காவுக்கு சென்றுள்ளனர்.
இதையடுத்து அங்குள்ள கதர்பாதக் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அணையில் அன்றைய சம்மர் கேம்ப் நிகழ்வுகளின் அடிப்படையில் புதன்கிழமை நீச்சல் பழகியுள்ளனர். அப்போது அந்த அணையில் மூழ்கி தனிஷ் ராஜா (வயது 13), சந்தோஷ்.கே (வயது 13), சரவணா (வயது 13) ஆகிய 3 மாணவர்களும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதிய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள கிராம மக்கள் ஆகியோர் நீரில் மூழ்கிய மாணவர்களின் உடல்களை மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
Advertisement
இதில், ஒரு மாணவரின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டாலும், மீதமுள்ள 2 மாணவர்களின் உடல்களையும் வியாழக்கிழமை மீட்டனர். இதுகுறித்து அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
சம்மர் கேம்ப் சுற்றுலாவுக்கு வந்த மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.