வீட்டுக் காவல்: வராவர ராவ் பலத்த பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்
கைது செய்யப்பட்ட இடதுசாரி ஆதரவாளர்கள் 5 பேரை செப்டம்பர் 6ம் தேதி வரை வீட்டுக் காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்த வராவர ராவ் பலத்த பாதுகாப்புடன் ஹைதராபாத் அழைத்து வரப்பட்டார்.
ஹைதராபாத்: கைது செய்யப்பட்ட இடதுசாரி ஆதரவாளர்கள் 5 பேரை செப்டம்பர் 6ம் தேதி வரை வீட்டுக் காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்த வராவர ராவ் பலத்த பாதுகாப்புடன் ஹைதராபாத் அழைத்து வரப்பட்டார்.
வராவர ராவுடன் புனே காவல்துறையினர் விமானம் மூலம் ஹைதராபாத் வந்து இன்று காலை 7 மணிக்கு வீட்டுக்கு அழைத்து வந்ததாக அவரது மனைவி ஹேமலதா கூறியுள்ளார்.
வீட்டுக்குள் எனது மகள் மற்றும் மருமகன் தவிர வேறு யாரையும் உள்ளே வரவோ, வெளியே செல்லவோ காவல்துறை அனுமதிக்கவில்லை என்றும், ஊடகங்களிடம் வராவர ராவ் பேச காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வராவர ராவ் வீட்டை காவல் காப்பதில் எந்த காவல்துறையினர் ஈடுபடுவார்கள் என்ற குழப்பம் நீடித்த நிலையில், அந்த பொறுப்பை ஹைதராபாத் போலீஸ் ஏற்றுக் கொள்வார்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கைது சம்பவத்தின் பின்னணி:
மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாகக் கூறி, இடதுசாரி ஆதரவாளர்கள் ஐவரை மகாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்த விவகாரத்தில், அவர்களை செப்டம்பர் 6-ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மகாராஷ்டிர காவல் துறையினரால், இடதுசாரி ஆதரவாளர்கள் 5 பேர் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் உள்பட 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவில் கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இதனை அவசர வழக்காக எடுத்துக்கொண்டது. அப்போது மகாராஷ்டிர அரசு சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்கள்,"ஏற்கனவே ஆர்வலர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத நபர்கள், ஆர்வலர்களுக்காக வழக்கு தொடர முடியாது' என்று வாதிட்டனர்.
இதனைக் கேட்ட நீதிபதிகள்,"எதிர்ப்பு தெரிவிப்பது என்பது மக்களாட்சியின் "பாதுகாப்பு வால்வு' போன்றது. அதனை அனுமதிக்காவிட்டால், அது வெடித்து சீரழிவை ஏற்படுத்திவிடும்' என்று தெரிவித்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக சிறையில் அடைக்காமல், காவல்துறையினரின் பாதுகாப்பில் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டனர். மேலும், குற்றம் நடைபெற்று 8 மாதங்கள் கழித்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அனைவரும் அவரவர் வீடுகளுக்கு, பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டதாக ஆர்வலர்கள் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: இதனிடையே, அவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி, மகாராஷ்டிர அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து ஆணையத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
5 பேர் கைது விவகாரத்தில், முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது ஊடகங்களின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. இது கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதிப்பதாக உள்ளது. எனவே, இந்தக் கைது நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய, மகாராஷ்டிர அரசின் தலைமை செயலர் மற்றும் காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
தெலங்கானா, மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட 6 மாநிலங்களில், மகாராஷ்டிர காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீர் சோதனைகளில், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக எழுத்தாளர் வராவர ராவ்(ஹைதராபாத்), இடதுசாரி ஆர்வலர்கள் வெர்னோன் கோன்சல்வேஸ் மற்றும் அருண் பெரைரா(மும்பை), வழக்குரைஞர் சுதா பரத்வாஜ்(சத்தீஸ்கர்), ஆர்வலர் கெளதம் நவ்லகா(தில்லி) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
எழுத்தாளர்கள் அருந்ததி ராய், ரொமிலா தாப்பர் ஆகியோரும், பல்வேறு இடதுசாரி கட்சிகளும் இக்கைது நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.