மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு கேவியட் மனு தாக்கல்
மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
புது தில்லி: மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் 30 சதவீத மக்கள் தொகை கொண்ட மராத்தா சமூகத்தினர், நீண்ட நாட்களாக இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் வன்முறையாக மாறியது.
இதற்கிடையே, மாநில பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மராத்தா சமூகத்தினரின் நிலை குறித்து ஆய்வு நடத்தியது. அதன்பிறகு, சமூகம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் மராத்தா சமூகத்தினரை அறிவிக்க வேண்டும் என்று அந்த ஆணையம் பரிந்துரைத்தது.
Advertisement
இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், மராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிர அரசு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மசோதா கடந்த 29-ஆம் தேதி ஒருமனதாக நிறைவேறியது. இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியதற்கு முதல்வர் ஃபட்னாவிஸ் எதிர்க்கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு திங்களன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
அதன்படி 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் யாராவது எதிர்த்து மனு தாக்கல் செய்தால் மகாராஷ்டிரா அரசின் கருத்தைக் கேட்காமல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.