முகப்பு
இந்தியா

உர்ஜித் படேலின் ராஜிநாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு:  பிரதமர் மோடி கருத்து 

உர்ஜித் படேலின் ராஜிநாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். 

Updated On : 10 டிசம்பர், 2018 at 7:23 PM
பகிர்:

புது தில்லி: உர்ஜித் படேலின் ராஜிநாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். 

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, வாராக்கடன் பிரச்னை, ரிசர்வ் வங்கியில் செயல்பாட்டில் மத்திய அரசின் தலையீடு மற்றும் ரிசர்வ் வங்கியின் உபரி நிதியினை அரசுக்கு கையளித்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்ததாக கூறப்பட்டது. 

இதுகுறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்க மத்திய நிதித் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு முன்பு உர்ஜித் படேல் கடந்த மாத இறுதியில் ஆஜராகி விளக்கமளித்தார். 

Advertisement

அப்போது வாராக்கடன் விவகாரம், தன்னிச்சையான அமைப்பான ரிசர்வ் வங்கியில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் பதில் எதுவும் அளிக்காமல் சமாளித்தார்.

மேலும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் தவிர்த்தார். இதையடுத்து, அடுத்த 10 முதல் 15 தினங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக பதிலை தாக்கல் செய்யுமாறு உர்ஜித் படேலுக்கு நிலைக் குழு அறிவுறுத்தியது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.  

சொந்தக் காரணங்களுக்காக பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்நிலையில் உர்ஜித் படேலின் ராஜிநாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

உர்ஜித் படேலின் ராஜிநாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் மிகவும் உயர்ந்த திறமை கொண்ட ஒரு பொருளாதார நிபுணர். வங்கிகளிடையே ஊர் ஒழுங்கமைவை ஏற்படுத்தி அதனை உறுதி செய்தார். 

ரிசர்வ் வங்கியின் நிதி நிலையில் ஒரு நிலைத்தன்மையை ஏற்படுத்தியவர். ரிசர்வ் வங்கி துணை நிலை ஆளுநராகவும் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.