பணமோசடி விவகாரம்: 1,326 நிறுவனங்களிடம் அமலாக்கத்துறை சோதனை
பணமோசடி செய்தது தொடர்பாக 1,326 நிறுவனங்களிடம் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக மத்திய அரசு செவ்வாய்கிழமை தெரிவித்தது.
பணமோசடி செய்தது தொடர்பாக 1,326 நிறுவனங்களிடம் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக மத்திய அரசு செவ்வாய்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து மத்திய இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தினார்.
இந்நிறுவனங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் மேலும் சோதனைகள் தொடரும், சில கைது நடவடிக்கைகளும் இருக்கக்கூடும். குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட வேளையில் திறக்கப்பட்ட நிறுவனங்களில் செய்யப்பட்ட பெரிய முதலீடுகள் குறித்தும் சோதனை மேற்கொண்டு வருவதாக அமலாக்கத்துறை அதிகாரி தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக 68 நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை தொடர்பாக நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு 216 மற்றும் 210(1)(சி) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக 17.42 லட்சம் வங்கிக் கணக்குகள் சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
அதுமட்டுமல்லாமல் பதிவு செய்த கடந்த 2 நிதியாண்டுகளில் எந்தவித செயல்பாடுகளும் இல்லாத 2,26,166 ஷெல் நிறுவனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.