நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கக் கூடாது என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர், தில்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பட்டாசுக்கு தடை விதித்துவிடுமோ என்ற அச்சத்தில், நாடு முழுவதும் உள்ள பட்டாசு வியாபாரிகள் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு எந்தவித ஆர்டர்களும் கொடுக்கவில்லை. இதனால், பட்டாசு ஆலைகள் நிரந்தரமாக மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவ்வழக்கில் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பட்டாசு வெடிப்பதால் மட்டுமே சுற்றுச்சூழல் மாசுபடுவது கிடையாது என்றும் தடை விதித்தால் சிவகாசியில் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே பட்டாசு தயாரிப்புக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் அடுத்த விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.