சர்வதேச அளவில் இந்தியா எழுச்சி பெறுவதை சகித்துக் கொள்ள முடியாதவர்கள்தான் சமூகத்தில் பல்வேறு தவறான தகவல்களைப் பரப்பி பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அந்த அமைப்பின் தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் தொண்டர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மோகன் பாகவத் பேசியதாவது:
சமூகத்துக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், தன்னலமற்ற சேவை மனப்பான்மையின் காரணமாகவும் பெரும்பாலானோர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து வருகின்றனர். அதேநேரத்தில் ஆதாயத்துக்காவோ, பிரதி பலனை எதிர்பார்த்தோ ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எவரும் வருவதில்லை.
எங்களது அமைப்பைப் பொருத்தவரை பிற அரசியல் கட்சிகளைப் போல தேர்தலில் போட்டியிடுவதில்லை. ஆனால், நாட்டின் நலனுக்காக அயராது பாடுபடுகிறோம். இந்திய தேசம் கலாசாரமும், பண்பாட்டுச் செறிவும் நிறைந்தது.
அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு எப்போதும் நாம் வலியுறுத்தி வருகிறோம். கடந்த 1857-ஆம் ஆண்டு வரையிலும் நம் நாட்டில் ஹிந்து - முஸ்லிம்கள் சகோதரத்துமாகவும், பாகுபாடு இன்றியும் வாழ்ந்து வந்தனர். பிரிட்டன் ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு முஸ்லிம் லீக் அமைப்புகளைத் தொடங்கச் செய்து சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தினர். அந்த நிலை இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தற்போது சர்வதேச அளவில் எழுச்சிமிக்க தேசமாக இந்தியா உருவெடுத்து வருவதைப் பொறுக்க முடியாத சிலர் மக்களிடையே பாகுபாட்டையும், பதற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிடுகின்றனர்
அவற்றை முறியடிக்கும் விதமாக சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் ஈடுபட வேண்டும் என்றார் மோகன் பாகவத். இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள் ஓம் மாத்தூர், மகேந்திரநாத் பாண்டே, சுனில் பன்சால், லட்சுமண் ஆச்சார்யா ஆகியோர் பங்கேற்றனர்.